திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.68 திருக்கயிலாயம் - திருவிராகம் பண் - சாதாரி |
வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி
தாளகயி லாயமலையே.
|
1 |
புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்றகயி லாயமலையே.
|
2 |
சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல
வங்கமொழி யெங்குமளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே.
|
3 |
முடியசடை பிடியதொரு வடியமழு
வுடையர்செடி யிடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத
ரடிகொள்கயி லாயமலையே.
|
4 |
குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ
விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ
விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர
வொடுங்குகயி லாயமலையே.
|
5 |
ஏதமில பூதமொடு கோதைதுணை
யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே.
|
6 |
சென்றுபல வென்றுலவு புன்றலையர்
துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி
சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன்
நின்றகயி லாயமலையே.
|
7 |
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை
யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும்
நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற
நெரித்தகயி லாயமலையே.
|
8 |
பரியதிரை பெரியபுனல் வரியபுலி
யுரியதுடை பரிசையுடையான்
வரியவனை யரியகணி யுருவினொடு
புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு
பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அறியமறை புரியவனும்
மருவுகயி லாயமலையே.
|
9 |
அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை
கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
சண்டவிருள் சண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில்
உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
யாதவயி லாயமலையே.
|
10 |
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும், திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம் பண் - பழம்பஞ்சுரம் |
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
1 |
வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தன்ஆ ரூராதி யானைக்காவே.
|
2 |
மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.
|
3 |
கருடனை யேறரி அயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
|
4 |
மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.
|
5 |
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருங்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் யானைக்காவே.
|
6 |
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
7 |
கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.
|
8 |
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
|
9 |
அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
|
10 |
ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |